கேரளத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"கேரளத்தில் புதிதாக 5,692 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 188 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 5,088 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 393 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 45,417 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.53 சதகிவிதம்.
நோய்த் தொற்றால் மேலும் 11 பேர் பலியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,794 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,474 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,20,174 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 47,596 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."