கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக கரோனா கோரத்தாண்டவம் எடுத்துள்ளது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இரவு ஊரடங்கு மட்டுமின்றி, 2 நாள் வார பொது முடக்கமும் தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் கேரளத்தில் ஊரடங்கு தொடங்கியுள்ளது. மக்கள் சரியான காரணம் இல்லாமல் தெருக்களில் வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது.
அதேபோல் அத்தியாவசியப் பொருள்களுக்கு மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தனியார் வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,30,617 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28,447 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் இதுவரை 1,78,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.