அவசர சிகிச்சைக்கு படுக்கை அளிக்காததால் மருத்துவமனை முன்பாக மூதாட்டி பலியானதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட 62 வயதான மூதாட்டி அவசர சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை எனக்கூறி மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தீவிர பாதிப்பில் இருந்த மூதாட்டி சில மணி நேரங்களிலேயே பரிதாபமாக பலியானார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சிகிச்சையளிக்க அனுமதிக்காத மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.