கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க இந்தியாவுக்கு 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவியுள்ளது சிங்கப்பூர் அரசு.
நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது அளிக்கப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தில்லியில் கடந்த 10 நாள்களில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான உயிரிழப்புகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்தவை என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தினசரி 5,700 மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது தினசரி 8,922 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இது இம்மாத இறுதிக்குள் தினசரி 9,250 மெட்ரிக் டன்களை கடக்கும் என்று எதிா்பாா்ப்பதாக தெரிவித்த அதிகாரிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் டேங்கா்களை கொண்டு சோ்த்தல், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் டேங்கா்களை கொண்டு வருதல் ஆகிய பணிகளில் இந்திய விமானப் படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க மாநிலங்களை ஊக்குவித்து வருவதாக தெரிவித்த அதிகாரிகள், கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளையும், படுக்கை வசதிகளையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஆண்டு, தொற்று பாதிப்புகளில் சிங்கப்பூருக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களை அனுப்பி வைத்து இந்தியா உதவியது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் இந்தியா போராடி வருகிறது. இந்த தருணத்தில் இந்தியாவுடன் நாங்கள் துணைநிற்போம் என்று தெரிவித்த சிங்கப்பூர் அரசு, கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் 256 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ பொருள்களை வழங்கி இந்தியாவுக்கு உதவியுள்ளது சிங்கப்பூர்.
ஆக்சிஜன் ஏற்பட்ட அந்நாட்டு விமானப்படையின் சி-130 ரக இரு விமானங்களை சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஓஸ்மான் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் 15 நாடுகள் முக்கியமான அவசர மருத்துவ உபகரணங்களை விரைந்து வழங்கி உதவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஹிண்டன் விமான தளத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானம், அங்கிருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்கத்தின் பனகர் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இதேபோன்று அவசர ஆக்சிஜன் விநியோகத்திற்கான வணிக ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற நாடுகளில் இருந்தும் விமானங்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.