அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் மற்றொரு தடுப்பூசி

சீரம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரலாம் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீரம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரலாம் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதார் பூனவல்லா நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசினார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்புக்கு பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பூனவல்லா பேட்டி அளித்தார்.

அப்போது, சீரம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரலாம் எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எங்களுக்கு அரசு உதவி செய்கிறது. நாங்கள் நிதி நெருக்கடியை சந்திக்கவில்லை. ஆதரவு அளித்து ஒத்துழைப்பு அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என கேள்வி எழுப்பியதற்கு, "குழந்தைகளுக்கு அடுத்தாண்டின் முதல் காலாண்டில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் கோவோவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும். மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தரும் அனுமதியை பொறுத்து வயது வந்தோருக்கு அக்டோபர் மாதம் கிடைக்கும் என நம்புகிறேன்.

இரண்டு தவணை தடுப்பூசியான கோவோவாக்ஸின் விலை பயன்பாட்டிற்கு வரும்போது நிர்ணயிக்கப்படும். தற்போதைக்கு, மாதத்திற்கு 13 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்றார். முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்து  பூனவல்லா ஆலோசனை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com