திரிபுரா மாநில முதல்வர் விப்லப் குமார் தேவை நடைப்பயிற்சியின்போது கொல்ல முயன்றதாக மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே வியாழக்கிழமை மாலை விப்லப் குமார் தேவ் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் மூவர் காரை ஓட்டிவந்துள்ளனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திரிபுரா காவல்துறையினர், "சியாம பிரசாத் முகர்ஜி சாலையில் அமைந்துள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே விப்லப் குமார் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | இந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பே இல்லையாம்
அப்போது, காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தை மீறி மூவர் காரை ஓட்டி வந்தனர். ஆனால், வாகனம் மோதவந்த நிலையில் அங்கிருந்து மறுபுறம் குதித்து விப்லப் தப்பித்துக் கொண்டார். இருப்பினும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
காரை மறிக்க முதல்வரின் பாதுகாப்பு அலுவலர் முயற்சித்தார். ஆனால், அவரால் முடியவில்லை. பின்னர், கெர்ச்சோமுஹானி பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதித்துறை நடுவர் பி.பி. பாலுக்கு முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.