புது தில்லி: தில்லியில் தலைமைக் காவலர் ஒருவர் தன்னைத் தானே, தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர் ராகேஷ் (35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராகேஷ் தற்கொலைக்கு முயன்றதன் காரணம் தெரியவரவில்லை.
இன்று காலை 6 மணிக்கு ராகேஷ் தற்கொலைக்கு முயன்றது குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக விரைந்து சென்ற காவலர்கள், சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
காவல்துறையில் அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால், அவரது தலையின் வலதுபுறத்தில் வைத்து சுட்டுள்ளார். இதில், துப்பாக்கிக் குண்டானது தலையின் இடதுபுறம் வழியாக வெளியேறியுள்ளது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராகேஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.