உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா மாதிரி பரிசோதனையை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 7 கோடியைக் கடந்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக நோய்த் தொற்றைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களும் கரோனா பரிசோதனைப் பணியில் முனைப்பு காட்டி வரும் வேளையில் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 7 கோடி பேருக்கு பரிசோதனைகள் நடத்தியிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 36,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் , இதற்கென்ற 73,000 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவை மாநில அரசு அமைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | 6 கோடி தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலமானது உத்தரப்பிரதேசம்
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் 6 கோடியைக் கடந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 5,07,22,629 முதல் தவணை கரோனா தடுப்பூசிகளும், 94,27,421 இரண்டாவது கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதோடு மாநிலத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 407 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.