நாட்டில் புதிய உச்சமாக, கடந்த அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு மூலமாக ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஏராளமானோர் தங்களது கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்கியதால், கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனை 26 சதவீதம் அதிகரித்து, அக்டோபரில் மட்டும் ரூ.1,00,943 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதுவே அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில், கிரெடிட் கார்டு மூலம் வர்த்தகம் ரூ.80,228 கோடியாக இருந்துள்ளது.
மாதச் சராசரி செலவினமானது, அக்டோபர் மாதத்தில் 49 சதவீதம் அதிகரித்து பதிவாகியுள்ளது, இது கடந்த 6 மாதத்தில் இல்லாத உயர்வாகும், இதன் மூலம், கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு செலவினத்தின் மீது மிகப்பெரிய மீட்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் ஜோடிக்கு திருமணம்
அதுபோல, எண்ம (டிஜிட்டல்) முறையிலான பணப்பரிவர்த்தனையும் இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஏராளமான இ-வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை தாராளமாக அறிவித்திருந்தன. இதுவும் செலவினம் அதிகரிக்கக் காரணமாகின.
அது மட்டுமல்ல, மற்றொரு புள்ளிவிவரம் சொல்லும் தகவல் என்னவென்றால், டெபிட் கார்டை விடவும், கிரெடிட் கார்டு மூலமான செலவின முறை அதிகரித்துள்ளது. அதாவது, டெபிட் கார்டு மூலமான செலவினங்கள் தற்போது யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படுவதால், இந்த விகிதாச்சார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், அக்டோபர் மாதம், ஒரு தனிச்சிறப்பு கொண்ட மாதம், ஏனெனில், தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்ததும் காரணம், அதேவேளையில், கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, அதற்குக் காரணம், பொருள்களை தவணை முறையில் வாங்கும் முறையை கிரெடிட் கார்டுகள் எளிமையாக்குவதும் என்று கூறப்படுகிறது.