முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்த செய்தி அறிந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயரதிகாரிகள் என 14 பேர் சென்றனர். வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் முற்பகல் 11.47 மணிக்கு புறப்பட்டுச் சென்றன. இந்த இரு ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து பிற்பகல் 12.20 மணிக்கு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த விபத்து செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் இன்று நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டத்தை இந்த செய்தி அறிந்து ரத்து செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், சோகமான செய்தியை அறிந்து வேதனையடைந்தேன். வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும். இந்த துயர செய்தியால் அதிகாரிகளுடன் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை நான் ரத்து செய்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.