கடந்த 31ஆண்டுகளில், காஷ்மீரில் 1,724 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் அதில் 89 பேர் காஷ்மீர் பண்டிட்கள் என்றும் மற்றவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் ஸ்ரீநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியாணாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில், ஸ்ரீநகர் உள்பட ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் காஷ்மீர் பண்டிட்கள், இஸ்லாமியர்கள், மற்ற சமூகத்தினர் உள்பட அப்பாவி பொதுமக்கள் பலர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவங்கள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. குறிப்பாக, 118 காஷ்மீர் பண்டிட்களின் குடும்பங்கள் ஜம்முவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஹரியாணாவை சேர்ந்த பி.பி. கபூர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காஷ்மீர் பண்டிட்களுக்கு அளிக்கப்பட்ட புனர்வாழ்வு குறித்து கேள்வி எழுப்பிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர், "1990 முதல் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பதற்றம் காரணமாக பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய 1.54 லட்சம் மக்களில் 88 சதவீதம் பேர் அதாவது 1.35 லட்சம் பேர் காஷ்மீரி பண்டிட்டுகள் ஆவர். 18,735 பேர் இஸ்லாமியர் ஆவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
எத்தனை காஷ்மீ்ர் பண்டிட்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது என்பது குறித்து ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்படவில்லை என கபூர் கூறியுள்ளார். ஆனால், ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள், பண்டிட்களை மறுகுடியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஷ்மீ்ர் பண்டிட்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்காகவே அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்படுவதாக பாஜக இரண்டு ஆண்டுகலுக்கு முன்பு தெரிவித்தது.
இருப்பினும், மார்ச் மாதம், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, 90களில் இருந்து 3,800 புலம்பெயர்ந்தோர் மத்திய அரசால் வழங்கப்பட்ட வேலைகளுக்குத் திரும்பியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.