வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த சிங்கு எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓராண்டுக்குப் பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.
எனினும் இந்த தேசிய நெடுஞ்சாலையில், இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கனரக வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றியது.
இதனை எதிர்த்து அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்கிவராத மத்திய அரசு கடந்த நவ.19-ஆம் தேதி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து விவசாயிகள் தில்லி எல்லைகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
இந்நிலையில், வேளாண் போராட்டம் நடைபெற்ற சிங்கு எல்லை தேசிய நெடுஞ்சாலையில், ஓராண்டுக்குப் பிறகு இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்படுவதால், சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.