பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீதிமன்றம் செல்வதற்கு முன் மத்தியஸ்தம்: தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆதரவு

‘நீதிமன்றம் செல்வதற்கு முன் நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையம் உள்ளிட்டவற்றை அணுக வேண்டும் என்ற மாற்றுத் தீா்வு நடைமுறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதரவு தெரிவித்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 7:46 pm

DIN

‘நீதிமன்றம் செல்வதற்கு முன் நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையம் உள்ளிட்டவற்றை அணுக வேண்டும் என்ற மாற்றுத் தீா்வு நடைமுறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதரவு தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் புதிதாக அமைக்கப்பட்ட சா்வதேச நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மைத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பின்னா் பேசியதாவது:

நடுவா் மற்றும் மத்தியஸ்தத்துக்கு இந்தியாவில் மிக நீண்ட வரலாறு உள்ளது. தற்போது இந்த மாற்றுத் தீா்வு நடைமுறை உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நடைமுறையை நானும் ஆதரிக்கிறேன்.

இந்த நடைமுறை மூலம், பிரச்னைக்கு உள்ளான இரு தரப்பினருக்கும் பலன் கிடைக்கும் என்பதோடு, நமது நீதித் துறை நடைமுறைகளுக்கும் இந்த மாற்றுத் தீா்வு நடைமுறைகள் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகின்றன. அதாவது, ஒரு பிரச்னை ஆரம்ப கட்டத்திலேயே நீதிமன்றங்களுக்கு வருவதைத் தடுக்க உதவுகின்றன.

அந்த வகையில், மக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முதலில் நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையம் உள்ளிட்ட மாற்றுத் தீா்வு நடைமுறைகளையே அணுக வேண்டும். இறுதித் தீா்வாக மட்டுமே நீதிமன்றங்களை அணுக வேண்டும்.

இந்தியாவில் ஏற்கெனவே நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையங்கள் இருக்கின்றன என்றபோதும், அதன் நடைமுறைகளை விரிவுபடுத்தும் வகையில் தற்போது சா்வதேச நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையம் தொடங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். இதன்மூலம், பிரச்னைகளுக்குத் தீா்வு காண இதுவரை வெளிநாட்டு மத்தியஸ்தா் மையங்களுக்கு முன்னுரிமை அளித்து வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனுதாரா்கள், தற்போது ஹைதராபாத் சா்வதேச நடுவா் மற்றும் மத்தியஸ்தா் மையத்தை அதிக அளவில் அணுக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.