மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
தில்லியில் மருத்துவ மாணவர்களின் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கரோனா அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இருக்க வேண்டுமே தவிர சாலைகளில் போராடும் குழுவில் இடம்பெறக் கூடாது. இதனால் காலதாமதம் செய்யாமல் மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு காலதாமதமாவதைக் கண்டித்து, தில்லியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு மாத காலமாக போராடி வரும் மருத்துவர்கள், நேற்று, தங்களது போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர்.
அப்போது அவர்களைத் தடுத்துநிறுத்தும் வகையில், காவலர்கள் மருத்துவர்களை இழுத்தும், தள்ளிக்கொண்டும் சென்று கைது செய்தனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு ராஜேந்திர நகர் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனைவரும் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.