சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென உத்தரவிட்ட நிலையில், ஒருசில கணக்குகளை மட்டுமே சுட்டுரை நிறுவனம் முடக்கியது.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய அவர், சமூக வலைதளங்களை இந்திய அரசு மதிக்கிறது. எனினும் அவை நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுவதாக இருக்கக் கூடாது.
சமூக வலைதளங்களின் இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவில் பயனர்களை பெறுகிறீர்கள். இந்திய பயனர்களால் வருவாய் ஈட்டுகிறீர்கள். எனில் இந்தியாவின் சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதால், பதற்ற நிலை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுட்டுரை, முகநூல், வாட்ஸ் ஆப், லிங்க்டுஇன் என எந்த வலைதளமானாலும், அவதூறாக பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.