ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட 6 பேர் கைது

கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தது குறித்து...

News image
இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்கள்.
Updated On :14 மார்ச் 2026, 4:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது. குறிப்பாக சிங்காநல்லூர் அருகே உள்ள நீர்கோணம்பாளையம் பகுதியில் நடந்து வரும் இருசக்கர வாகனத் திருட்டு தொடர்பாக போலீஸ் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். இதில்ஷ ஆறு பேர் கொண்ட கும்பல் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆறு பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய தங்கை இசக்கி, திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக், கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ், திருச்சி பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆறு பேரும் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருவதும், சிங்காநல்லூர், போத்தனூர், ஆலந்துறை, அன்னூர், புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்படிருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் குறிவைத்து திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், இசக்கி மீது பீளமேடு கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலும், இசக்கி முத்து மீது சரவணம்பட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்திலும், தீபக் திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.