வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றே கடைசி நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனி நபா்கள் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரையும், நிறுவனங்களுக்கான அவகாசத்தைப் பிப்ரவரி 15-ஆம் தேதி வரையும் மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி மூன்றாவது முறையாக நீட்டித்திருந்தது.
கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் பிப்.15 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.
அதன்படி, வரி செலுத்துவோர் அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் நாளை முதல் அபராதம் செலுத்தியே வருமான வரி தாக்கல் செய்ய முடியும். வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.