

புது தில்லி: இந்தியாவில் மீண்டும் கரோனா அலை எழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடையவில்லை என்றாலும், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
உதாரணமாக குஜராத், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
நாட்டிலும், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதியானது. அதற்கு முந்தைய நாள்களை விட அது மிக அதிகம்.
நாட்டிலேயே அதிகக் கரோனா பாதிப்பு இருந்த மகாராஷ்டிரத்தில் மெல்ல குறைந்து வந்தாலும், பிப்ரவரி 14-ஆம் தேதிக்கப் பிறகு புதிய கரோனா பாதிப்பு 4,092 ஆக உயர்ந்தது. கரோனா குறையத் தொடங்கிய பிறகு கடந்த ஜனவரி 6-ம் தேதி 4382 தான் அதிக பாதிப்பாக இருந்த நிலையில், பிப்ரவரியில் மீண்டும் 4 ஆயிரத்தைத் தாண்டியது.
அதுபோலவே மும்பையில் பயணிகள் ரயிலில், பொதுமக்களுக்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஹரியாணாவில் நாள்தோறும் கரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாகவே பதிவாகி வந்த நிலையில், பிப்ரவரி 11-ஆம் தேதிக்குப் பிறகு 100-க்கும் மேல் பதிவாகி வருகிறது. குஜராத்திலும் இதே நிலைதான்.
அவ்வளவு ஏன்? சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 1500 என்ற அளவிலேயே நீடித்து வந்த நிலையில் தற்போது 1600 ஆக உயர்ந்துள்ளது. இது மிகச் சிறிய எண்ணிக்கை என்றாலும், குறைந்து கொண்டிருந்த எண்ணிக்கை திடீரென 'யு டர்ன்' எடுப்பதைப் போன்ற தோற்றம் காணப்படுகிறது.
பிப்ரவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு, முதல் முறையாக நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,34,033 ஆக உயர்ந்துள்ளது. அதோடு கடந்த 10 நாள்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,111 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது என்பது மட்டும் உண்மை. கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையிலிருந்து மாறி, தற்போது அதிகரித்து வருகிறது என்பது நிச்சயம் கவலைக்கொள்ள வேண்டிய விஷயம். ஒரு வேளை இது இந்தியாவில் மீண்டும் கரோனா அலைக்கான அறிகுறியா என்றும் சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, இனிதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தற்போதைய சூழ்நிலை அறிவுறுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.