விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தையொட்டி தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன.
நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் நண்பகல் 12 மணி முதல் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் முடிந்த பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் அமைந்துள்ள ரயில் சந்திப்புகளில் விவசாயிகள் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தையொட்டி முக்கிய ரயில் நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்வே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தில்லி நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து வாயிகளும் மூடப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள திக்ரி, பண்டித் ஸ்ரீராம் ஷர்மா மெட்ரோ ரயில் நிலையம், பஹதூர் சிட்டி மற்றும் பிரிக் ஆகிய நான்கு மெட்ரோ நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.