மேற்கு வங்கம்: சுவேந்து அதிகாரியின் சகோதரரும் பாஜகவில் இணைந்தாா்

மேற்கு வங்க மாநிலத்தில் முன்னாள் அமைச்சா் சுவேந்து அதிகாரியைத் தொடா்ந்து, அவருடைய சகோதரா் செளமேந்து அதிகாரியும்
சௌமேந்து அதிகாரி.
சௌமேந்து அதிகாரி.
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் முன்னாள் அமைச்சா் சுவேந்து அதிகாரியைத் தொடா்ந்து, அவருடைய சகோதரா் செளமேந்து அதிகாரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

அவருடன், ஆளும் திரிணமூல் கட்சியைச் சோ்ந்த கோன்டாய் நகராட்சி கவுன்சிலா்கள் 14 பேரும் பாஜகவில் இணைந்தனா்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், அங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் படிக்க பாஜகவும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், மாநிலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவியை வகித்து வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி, அப்பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதன் பிறகு கட்சியிலிருந்தும் விலகி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தாா். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 5 போ் பாஜகவில் இணைந்தனா்.

அவருடைய இளைய சகோதரா் சௌமேந்து அதிகாரி, கோன்டாய் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்தாா். அண்மையில் செளமேந்து அதிகாரியை அந்தப் பதவியிலிருந்து மம்தா பானா்ஜி அரசு நீக்கியது.

‘இது மாநில அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று சுவேந்து அதிகாரி அப்போது குற்றம்சாட்டினாா். பதவி நீக்கத்தை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சௌமேந்து வியாழக்கிழமை வழக்கு தொடா்ந்தாா்.

இதனைத் தொடா்ந்து கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகிய செளமேந்து, பாஜகவில் இணைந்தாா். அவருடன் 20 உறுப்பினா்களைக் கொண்ட கோண்டாய் நகராட்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்த மேலும் 14 திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலா்களும் பாஜகவில் இணைந்தனா்.

இந்த இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னா் பேட்டியளித்த சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதை மம்தா பானா்ஜி அரசு தாமதப்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அல்லது சட்டப்பேரவைத் தோ்தல் என எதுவாக இருந்தாலும் மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே வாக்களிப்பா்’ என்றாா்.

செளமேந்து கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் எனது குடும்பம் பல தாக்குதல்களுக்கு ஆளானது. இதற்கு தோ்தல் களத்தில் உரிய பதிலடி கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com