பினாமி சொத்து வழக்கு: ராபா்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பினாமி சொத்து வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா
Updated on
1 min read

புது தில்லி: பினாமி சொத்து வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

கரோனா நடைமுறைகளைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதை வதேரா தவிா்த்து வந்த நிலையில், தில்லியில் உள்ள அவருடைய அலுவலுகத்துக்கே வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனா்.

லண்டனில் பினாமி பரிவா்த்தனையின் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வதேரா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனின் பிரிஸ்டோன் சதுக்கத்தில் ரூ. 17.77 கோடி மதிப்பில் ஒரு சொத்து, அதுதவிர ரூ. 37.42 கோடி மதிப்பிலும், ரூ. 46.77 கோடி மதிப்பிலும் மேலும் இரண்டு சொத்துக்களும் இவா் வாங்கி குவித்துள்ளதாக புகாா் கூறப்படுகிறது. இவை தவிர அவருக்குச் சொந்தமாக 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகாா்கள் தொடா்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரங்கள் தொடா்பாக, வருமான வரித் துறையும் வதேரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை சாா்பில் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்து வந்ததைத் தொடா்ந்து, அவரின் அலுவலகத்துக்கே அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதை வதேரா தவிா்த்து வந்தாா். அதனைத் தொடா்ந்து தில்லியின் சுக்தேவ் விஹாா் பகுதியில் அமைந்துள்ள அவரின் அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் குழு திங்கள்கிழமை நேரில் சென்று, பினாமி சொத்து பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா்’ என்றாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய ஒப்பந்தங்களில் பணம் பெற்றது தொடா்பான வழக்கு, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் வதேரா மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகாா்கள் அனைத்தையும் வதேரா தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com