ஐக்கிய நாடுகள்: புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1-ம் தேதி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் அதாவது 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
உலகளவில் புத்தாண்டு பிறப்பன்று 3,71,500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஃபிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்துள்ளது. அதாவது இந்தியா (59,995), சீனம் (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ (8,640) ஆகியவையாகும்.
2021-ஆம் ஆண்டு யூனிசெஃப் அமைப்பின் 75வது ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் வித்தியாசமான ஒரு உலகில் நுழைந்துள்ளார்கள், மேலும் இந்த புத்தாண்டு, ஒரு ஆண்டை மறுபரிசீலனை செய்ய புதிய வாய்ப்பைக் கொண்டு வருகிறது என்று யூனிசெஃப்பின் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா ஃபோர் தெரிவித்துள்ளார்.