

பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து கேரளத்திற்கு மூவர் அடங்கிய மத்தியக் குழு வந்தடைந்தது. அங்கு அவர்கள் பறவைக் காய்ச்சல் குறித்த ஆய்வை தொடங்கியுள்ளனர்.
சுகாதாரத்துறையின் சிறப்பு பொதுமருத்துவர் ருச்சி ஜெயின், புணே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி ஷைலேஷ் பவார், தில்லி ஆர்.எம்.எல். மருத்துவமனை மருத்துவர் அனித் ஜிந்தால் ஆகிய மூவர் அடங்கிய மத்தியக் குழு ஆலப்புலா, கோட்டயம் ஆகிய ஆட்சியரக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்டுள்ள கருவட்டா பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
பறவைக் காய்ச்சல் பரவலால் ஆலப்புலா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 69 ஆயிரம் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இரு மாவட்டங்களிலும் 19 குழுக்கள் மூலம் பறவைகள் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயமுள்ள பகுதிகளிலும் பறவைகளை கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எச்5 என்8 என்ற பறவைக் காய்ச்சல் இதுவரை மனிதர்களுக்கு கண்டறியப்படவில்லை என்று கேரள கால்நடை பராமரிப்பு அமைச்சர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.