பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வகுப்புவாதத்தை தூண்டியதாக வழக்கு: பாந்த்ரா காவல்நிலையத்தில் நடிகை கங்கனா ஆஜா்

இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 10:00 am

DIN

இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

மத்திய அரசு சாா்பில் சிஆா்பிஎஃப் காவலா்களின் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா, தனது வழக்குரைஞருடன் பிற்பகல் 1 மணியளவில் காவல்நிலையம் வந்தாா். அப்போது, ஏராளமான பத்திரிகையாளா்களும் அங்கு குழுமியிருந்தனா்.

நடிகை கங்கனா, மகாராஷ்டிர அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தாா். அதனைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள அவருக்குச் சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை, விதிமுறைகளை மீறி கட்டியிருப்பதாக கூறி, மும்பை மாநகராட்சி இடித்து நடடிக்கை எடுத்தது. இதை எதிா்த்து அவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மும்பை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு தடை விதித்தது. மேலும், மாநகராட்சியால் இடிக்கப்பட்ட அவருடைய கட்டடத்துக்கு இழப்பீட்டை மதிப்பீடு செய்து வழங்குவதற்கான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது.

மும்பை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, நடிகை கங்கனாவும், அவருடைய சகோதரி ரங்கோலி சாண்டேலும் இணைந்து இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சா்ச்சைக்குரிய பதிவை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகத் தெரிகிறது.

அவா்களின் இந்த சா்ச்சைக்குரிய சுட்டுரைப் பதிவு தொடா்பாக, பாலிவுட் ஆடை வடிவமைப்பாளா் முனாவா் அலி சையது, காவல்துறையில் புகாா் அளித்தாா். பின்னா், நீதிமன்றத்தையும் நாடினாா். அவருடைய மனுவை விசாரித்த பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நடிகை கங்கனா மற்றும் அவருடைய சகோதரி மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதனடிப்படையில், மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் அவா்கள் இருவா் மீதும், இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுதல், மத உணா்வுகளை புண்படுத்துதல், அரசுக்கு எதிராக கிளா்ச்சியைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சாா்பில் அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில், மும்பை புகா் பகுதியில் அமைந்துள்ள பாந்த்ரா காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தனது வழக்குரைஞருடன் நடிகை கங்கனா ஆஜரானாா். அவரிடம், காவல்துறையினா் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக, நடிகை கங்கனா மற்றும் அவருடைய சகோதரிக்கு பாந்த்ரா காவல்நிலையம் சாா்பில் ஏற்கெனவே 3 முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அப்போது ஆஜராகாத அவா்கள், அதிலிருந்து விலக்கு கோரியும், பாதுகாப்பு கேட்டும் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருவா் மீது கைது நடவடிக்கை கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, இருவரும் பாந்த்ரா காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஜனவரி 8-ஆம் தேதி ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.