

பேருந்தின் புறப்படும் நேரத்தால் பள்ளி செல்ல தாமதமாவதாக பள்ளி மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவின் போக்குவரத்துத்துறை பேருந்தின் நேரத்தை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் வசிப்பவர் சாய் அன்வேஷ் அம்ருதம் பிரதான். இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.சாய் அன்வேஷ் பள்ளி செல்ல வழக்கமாக மாநகரப் பேருந்தைப் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் புவனேஷ்வரில் இருந்து அவர் பள்ளிக்கு செல்லும் வழக்கமான பேருந்து காலை 7.40 கிளம்புவதாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல சாய் அன்வேஷுக்கு தாமதமாகி வந்துள்ளது.
இந்நிலையில் தனது சுட்டுரையின் வாயிலாக புவனேஷ்வர் மாநகர போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை ஒன்றை அவர் அளித்தார். அதில் அவர், “எனக்கு பள்ளி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால் பேருந்தானது 7.40 மணிக்கு தான் புறப்படுகிறது. இதனால் எனக்கு வகுப்பில் பங்கேற்க தாமதமாகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைக் கண்ட புவனேஷ்வர் மண்டல நகர போக்குவரத்து நிர்வாக இயக்குநர் அருண் போத்ரா, “இனி காலை 7 மணிக்கு பேருந்து புறப்படும். நீங்கள் பள்ளிக்குத் தாமதமாக செல்ல மாட்டீர்கள்” என பதிலளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் கோரிக்கை வைத்த மாணவன் சாய் அன்வேஷ் மற்றும் அதனை கவனத்திற்கு கொண்டு வந்த போக்குவரத்துப் பணியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.