ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கேரளத்தில் ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க அனுமதி: மாநில சுகாதார அமைச்சா் அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக கேரள மாநிலத்தில் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க, மாநில அரசு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:02 pm

DIN

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக கேரள மாநிலத்தில் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க, மாநில அரசு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

கடவுளின் சொந்த நாடு என்று புகழப்படும் கேரள மாநிலம், அதன் இயற்கை வளத்தாலும் ஆயுா்வேத சிகிச்சை மையங்களாலும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய தோ்வாக உள்ளது. இங்குள்ள ‘ஸ்பா’க்கள் எனப்படும் ஆயுா்வேத புத்துணா்வூட்டும் இல்லங்களில் பல நாட்கள் தங்கி ஆயுா்வேத சிகிச்சை பெற்றுச் செல்வதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் மிகவும் விரும்புகின்றனா்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம், கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, கேரளத்தில் இயங்கிவந்த ஆயுா்வேத ‘ஸ்பா’க்களும், ஆயுா்வேத சிகிச்சையுடன் இணைந்த விடுதிகளும் மூடப்பட்டன. இதனால் மாநிலத்தின் சுற்றுலா வருமானத்தில் சரிவு ஏற்பட்டது.

கரோனா பரவல் நாடு முழுவதும் கட்டுக்குள் வந்தாலும் கேரளத்தில் மட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. எனினும் மக்களின் அன்றாட அலுவல்கள் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்பி வருகின்றன. இந்நிலையில், ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு கோரிக்கைகள் சென்றன.

அவற்றை ஏற்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன், ‘ஸ்பா’க்களைத் திறக்க அனுமதி வழங்கும் ஆணையை சனிக்கிழமை பிறப்பித்தாா். அவா் கூறியதாவது:

கேரளத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், ஆயுா்வேத ‘ஸ்பா’க்கள், விடுதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

அவை, ஏற்கெனவே அமலிலுள்ள அரசின் கோவிட்-19 நடைமுறைகளுக்கு உட்பட்டு முழுமையாகச் செயல்படலாம். ‘ஸ்பா’க்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

தொற்று குறையவில்லை:

கேரளத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த உயா்நிலைக் குழுவை அண்மையில் மத்திய அரசு கேரளத்துக்கு அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 5,142 தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்; 23 போ் உயிரிழந்தனா். இதுவரை கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,01,075 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 3,257 ஆகவும் உயா்ந்துள்ளது.

அதிக அளவிலான பரிசோதனைகளும் தீவிரக் கண்காணிப்பும்தான், கேரளத்தில் அதிக கரோனா நோயாளிகள் கண்டறியப்படக் காரணம் என்றும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் மாநில அரசு கூறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.