இந்திய ராணுவத்துக்கு வலிசேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் 73 தேஜாஸ் எல்.சி.ஏ போர் விமானங்கள் மற்றும் 10 பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. தேஜஸ் எம்.கே-1 ஏ லைட் காம்பாட் விமானம் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியில் முக்கியத் திருப்பமாக இருக்கும் என்றும் மேலும் தற்போதைய எல்.சி.ஏ சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக விரிவுபடுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.