குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்குப் பதிலாக, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜியின் படத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைத்துள்ளதாக டிவிட்டர் தளத்தில் ஏராளமானோர் விமரிசித்து வருகின்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 23-ம் தேதி திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருப்பது நேதாஜி அல்ல என்றும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி தான் என்றும் டிவிட்டர்வாசிகள் விமரிசித்தும் கேலி செய்தும் வருகின்றனர்.
இதுபற்றி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டது:
"ராமர் கோயிலுக்கு ரூ. 5 லட்சம் கொடையாக வழங்கிய பிறகு, நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகர் ப்ரோசென்ஜித் படத்தைத் திறந்து வைத்து நேதாஜிக்கு மரியாதை செலுத்தியுள்ளார் குடியரசுத் தலைவர்." எனினும், மொய்த்ரா இந்தப் பதிவைப் பின்னர் நீக்கிவிட்டார்.
ஆனால், இந்தப் படத்தில் இருப்பது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் என்றும், உறவினர்களிடமிருந்து வாங்கிய நிஜ புகைப்படத்தைக்கொண்டு ஓவியர் பரேஷ் மெய்டி வரைந்த படத்தையே குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.