மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தில்லியிலுள்ள பிரதமர் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே, அனுப்பிரியா உள்ளிட்டோர் பிரதமர் இல்லத்தில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது முறை பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளது.
இதில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி போன்றோர் காலமானதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் உருவாகியுள்ளன.
சிவசேனை, அகாலிதளம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால், அந்த அமைச்சரவை இடங்களும் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மத்திய அமைச்சரவையில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் போன்றோர் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
இந்த பொறுப்புகளை பிரித்து வழங்குவது மற்றும் கரோனா பெருந்தொற்று மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான மற்றும் இளம் தலைமுறையினர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைக் கவரும் வகையிலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.