மலப்புரம்: புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை அறக்கட்டளையின் நிர்வாகியுமான பி.கே. வாரியர் இன்று காலமானார். அவருக்கு வயது 100.
கடந்த ஜூன் 8ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பி.கே. வாரியர் கோட்டக்கல்லில் இன்று பகல் 12.30 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை கோட்டக்கல்லில் உள்ள அவர்களது குடும்ப மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புகளுக்கு கோட்டக்கல்லில் உள்ள ஆர்ய வைத்திய சாலை ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவர் கரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தார்.
ஆயுர்வேத மருத்துவத்தில், ஆராய்ச்சி, மேம்பாடு, பரவலாக்கம் போன்றவாற்றால் உலகறியச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரரான இவருக்கு 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2010ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.