களப்பணிகளில் சிறந்து விளங்கும் சாதிக்கத் தூண்டும் நபர்களை பத்ம விருதுகளுக்காக மக்கள் பரிந்துரைக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், களப்பணிகளில் சிறந்து விளங்கும் சாதிக்கத் தூண்டும் நபர்களை பத்ம விருதுகளுக்காக மக்கள் பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நாம் அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், மக்களின் பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம்.
http://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீங்கள் உங்களின் பரிந்துரைகளை மேற்கொள்ளலாம்" என பதிவிட்டுள்ளார்.