தில்லி: இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோர பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி பணியை மேலும் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோர பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல் உள்ளன.
இவ்விவகாரம் குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இரண்டு நிறுவனங்களுடனும் பேசியுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனங்கள் பதில் அளித்துள்ளது.
கோவேக்ஸ் திட்டம் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு ஏழு மில்லயன் தடுப்பூசிகள் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆனால், அதுவும் தாமதமாகியுள்ளது.
மாடர்னாவுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், அமெரிக்காவிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய சில சட்ட விவகாரங்கள் தடையாக உள்ளது. இதுகுறித்தும் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை.