மும்பை: கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி 15 நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிரம் வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக மாநில முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் ஒருவர் செலுத்திக் கொண்டு, 15 நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிரத்துக்கு வருவதாக இருந்தால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கையில் கொண்டு வர வேண்டும். அவர்கள் மகாராஷ்டிரத்துக்குள் நுழையும் போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றவர்கள் மாநிலத்துக்குள் நுழையும் போது 72 மணி நேரத்துக்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.