கர்நாடகத்தில் 1,784 பேர் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பு:
"கர்நாடகத்தில் மொத்தம் 1,784 பேர் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் குணமடைந்துள்ளனர். 111 பேர் பலியாகியுள்ளனர். 1,564 பேர் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகத்துக்கு போதுமான அளவுக்கு மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 18,650 குப்பிகள் ஆம்போடெரிசின் பி மருந்து கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 8,860 குப்பிகள் அரசு மருத்துவனைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 9,740 குப்பிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன."
தடுப்பூசிகள் குறித்து கூறுகையில், "மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஜூன் இறுதியில் 2.25 கோடி மக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக் கொள்வார்கள். அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்" என்றார்.