

பெங்களூரு: தற்போது கரோனா பரவல் குறையலாம், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையலாம். ஆனால், கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து வருவதாக நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழும், கரோனாவுக்கு பலியாகும் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகப் பதிவானால்தான் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக அர்த்தமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது அடுத்த இரண்டு வாரங்களில்தான் தெரிய வரும். தற்போது இந்தியாவில் பரவி வரும் வீரியமிக்க டெல்டா வைரஸின் தீவிரம் குறையவும் இல்லை. அது இப்போதும் பரவிதான் வருகிறது என்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தின் கரோனா நிபுணர் குழுவின் உறுப்பினர் மருத்துவர் வி. ரவி கூறுகையில், கரோனாவின் வீரியமிக்க டெல்டா என்று பெயரிடப்பட்டிருக்கும் வைரஸ் தற்போதும் பரவி வருகிறது. ஒரு வேளை தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியே வந்து, கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும். ஊரடங்கு காரணமாகவே பாதிப்பு குறைவாக உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும். ஆனால், கரோனா தொற்றின் பரவும் வீரியம் குறைந்துவிட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, கரோனா தொற்றுப் பரவலின் வீரியம் குறைந்து வருவதை எப்போது உணரலாம் என்றால், அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு கரோனா உறுதி செய்ப்படும் போதுதான். கர்நாடகத்தில் இது தற்போது 8.81 சதவீதமாக உள்ளது. கரோனா பலி விகிதமும் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.