கர்நாடகத்தில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், புதிதாக கர்நாடகத்திலும், 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது,
மைசூர் மற்றும் பெங்களூருவில் தலா ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் கரோனா பாதித்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கேரளம், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை செவ்வாயன்று 22 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வழங்கியிருந்தது.