ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி, அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கையுடன் உணவகங்கள் மற்றும் பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவகங்களில் இருந்து இரவு 10 மணி வரை உணவு டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகிறது. மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. அதுவும் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.
அதே நேரத்தில் கார்ப்பரேட் அலுவலகங்கள் நூறு சதவீதம் பேருடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. திருமணங்களில் கூட்டங்கள், இறுதி சடங்குகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றன. திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது. உடற்பயிற்சி கூடங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.