53 நாள்கள் பொதுமுடக்கத்திற்கு பிறகு கொச்சி மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
கரோனா பரவல் காரணமாக கேரளத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மாநிலத்தின் நிலைக்கேற்ப அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொச்சி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.
முதற்கட்டமாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் உறுதியளித்துள்ளது.