தேர்தல் நடத்தை விதிகள் - பொது விதிமுறைகள்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.


தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போதே, தேர்தல் நடத்தை விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதலே நடத்தை விதிகள் அமலாவது வழக்கமாக மாறியுள்ளது.
அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் பல்வேறு விதிகளே தேர்தல் நடத்தை விதிகள்.
இதையும் படிக்கலாமே.. வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலில் 1951-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது தேர்தல் நடத்தை விதிகள் என்று எதுவும் பின்பற்றப்படவில்லை.
அதன்பிறகு கேரளத்தில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, அவை கடைப்பிடிக்கப்பட்டன. அதுதான் முதல் தேர்தல் நடத்தை விதிகளாகும்.
அதன்பிறகு படிப்படியாக, ஆளுங்கட்சியினர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடாத வகையில் தேர்தல் ஆணையத்தால் பல கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.
இந்த தேர்தல் நடத்தை விதிகளில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார உரை, பொதுக் கூட்டம் நடத்துவது, தேர்தல் அறிக்கை என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
பொதுவான விதிமுறைகள்
1. எந்த அரசியல் கட்சியும், மத, இன உணர்வைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.
2. அரசியல் கட்சிகளைத் தாக்கிப் பேசும்போது, அவற்றின் கொள்கை, திட்டங்கள், பணிகளை மட்டுமே குறிப்பிட வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கைப் போன்றவை குறித்துப் பேசக் கூடாது.
3. வாக்குகளை சேகரிக்க ஜாதி மற்றும் இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய இடங்களில் அரசியல் கட்சியினர் பிரசாரக் கூட்டம் நடத்தக் கூடாது.
4. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது. வேறு எந்த பரிசு பொருளும் வழங்கக் கூடாது. வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் பிரசாரம் செய்யக் கூடாது. தேர்தல் நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்துக்குள் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வாகன வசதியை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தித்தரக் கூடாது.
5. ஒது தனி நபரின் கொள்கை முடிவு மற்றும் கருத்துகளை எதிர்த்து, அவர்களது வீடுகளை முற்றுகையிடுவது, தனிநபரை தாக்கிப் பேசுதல் போன்றவை கூடாது.
6. ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் தொண்டர்கள், தனி நபரின் இடம், கட்டடம், சுவர் போன்றவற்றை அவர்களது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
7. இதர கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் அல்லது பேரணிகளை, மற்ற கட்சிகள் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மற்ற கட்சிக் கூட்டங்களில், பிற அரசியல் கட்சித் தொண்டர்கள் கூச்சலிடுவது, கேள்வி எழுப்புவது போன்றவை செய்யக் கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டும் போஸ்டர்களை பிறக் கட்சியினர் அகற்றக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...