103 வயது பாட்டி செய்த துணிச்சலான காரியம்: அனைவருக்கும் முன்மாதிரியானார்
பெங்களூரு: நாட்டின் மிக வயதான பெண்மணி என்று அறியப்படும் கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஜே காமேஷ்வரி. 103 வயதான இவர்தான் இந்தியாவின் மிக வயதான பெண்மணி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவர் நேற்று அப்போல்லோ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் 60 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின் மிக வயதானவராக அறியப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 102 வயது சுப்ரமணியன், கொலம்பியா ஆசிய மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், காமேஷ்வரி நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
காமேஷ்வரியுடன், அவரது 77 வயது மகன் பிரசாத் ராவ் மற்றும் தனது குடும்பத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்களுடன் மருத்துவமனைக்கு வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
அனைவரும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு சுமார் ஒரு அரைமணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறுகையில், கரோனா பேரிடர் காலத்தில், தாமாக முன் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த காமேஷ்வரி மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெகுவாகப் பாராட்டுவதாகவும், இவர்கள் நாட்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

