ஆந்திரம் - ஒடிசா எல்லையிலுள்ள சிலேரு ஆற்றில் நாட்டுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தை உயிரிழந்தது.
மேலும் விபத்தில் காணாமல் போன 8 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரம் - ஒடிசா எல்லையான சித்ரகொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு படகு மூலம் சென்றுள்ளனர்.
ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் சாலை மார்க்கமாக காவல் துறை சோதனை நடைபெறும் என்பதால், ஆற்றைக் கடந்து செல்ல புலம்பெயர்த் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர்.
இரண்டு நாட்டுப் படகுகளில் சிலேரு ஆற்றை கடந்து செல்ல முயன்றனர். அப்போது ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் இருந்தவர்கள் மற்றொரு படகில் ஏறியதால் அதிக எடையின் காரணமாக இரண்டாவது படகும் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
தகவலறிந்து வந்த காவல் துறையினர் மீட்புப் படையின் உதவியுடன் தேடுதல் பணிகளைத் தொடங்கினர். இதில் 15 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.