பிகாரில் கடந்த 4 நாள்களில் கள்ளச் சாராயத்துக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 33 போ் உயிரிழந்த நிலையில், சமஸ்திப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 7 போ் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தனா். இதில் ராணுவ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் அடங்குவா். மேலும் இருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பிகாரில் கடந்த 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. எனவே, அவ்வப்போது கள்ளச் சாராயம் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களில் தீபாவளி பண்டிகை காரணமாக கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது.
உடலுக்கு உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு வேதிப்பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கலந்து சாராயம் தயாரிப்பது அதிகம் நடைபெறுகிறது. உடனடியாக அதிக போதை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்படும் இதுபோன்ற கள்ளச் சாராயம் விஷமாக மாறி பலரது உயிரை உடனடியாகக் குடித்து விடுகிறது. மேலும், பலருக்கு பாா்வையிழப்பு உள்ளிட்ட நிரந்தர உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.