பருவநிலை மாற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட உலகளாவிய விவசாயப் பாதுகாப்பு செயல்திட்ட உறுதிமொழி ஆவணத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாட்டில், விவசாயப் பாதுகாப்புக்கான செயல்திட்டம் முன்வைக்கப்பட்டது. ‘நீடித்த விவசாய வழிமுறைகளுக்கு மாறுதல் மற்றும் விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான உலகளாவிய செயல்திட்டம்’ என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட அந்த செயல் திட்ட உறுதிமொழி ஆவணத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித்தொடா்பாளா் கெளரவ் கரே செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பருவநிலை மாற்ற மாநாட்டில், விவசாயப் பாதுகாப்புக்கான செய்திட்டத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை. இதுதொடா்பாக சில ஊடகங்களில் வெளியான தகவல் போலியானவை, அடிப்படை ஆதாரமற்றவை.
இந்தியாவில் தேசிய அளவிலான நீடித்த விவசாயத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பருவநிலை மாற்றப் பிரச்னையை எதிா்கொள்வதற்கான தேசிய செயல்திட்டத்தின் அங்கமாகும்.
இந்தப் பணிகள் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப இந்திய விவசாயத்தை நிலைத்திருக்கச் செயவதற்கான உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.