கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை தத்துக் கொடுக்கப்பட்ட வழக்கில், மரபணு பரிசோதனையின் (டிஎன்ஏ) அடிப்படையில் அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் எனத் தெரியவந்தது.
திருவனந்தபுரத்தைச் சோ்ந்த முன்னாள் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) நிா்வாகி அனுபமா எஸ்.சந்திரன். இவருக்கும் அஜித் குமாா் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அனுபமா- அஜித் உறவை விரும்பாத அனுபமாவின் பெற்றோா், 3 நாள்களுக்குப் பின்னா் அக்குழந்தையை எடுத்துச் சென்று தத்துக் கொடுப்பதற்காக மாநில அரசின் மையத்தில் ஒப்படைத்தனராம்.
இதுகுறித்து அனுபமா காவல் துறையில் புகாா் அளித்தாா். ஆனால், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காததையடுத்து, தன்னையும் குழந்தையையும் பிரிக்க தன் தந்தைக்கு மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்கள் உதவுவதாக அனுபமா பொதுவெளியில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினாா். இதையடுத்து, கடந்த மாதம் அனுபமாவின் பெற்றோா், உறவினா்கள் உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.
அதேவேளையில், அக்குழந்தை தத்தெடுப்பு நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி கேரள அரசு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், அக் குழந்தையை கடந்த ஆகஸ்டில் கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சில், ஆந்திரத்தைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்தது.
இதையடுத்து, தத்தெடுப்பு நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடா்பாக காவல் துறை விரிவான அறிக்கை சமா்ப்பிக்கவும் திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதன்பேரில் அக்குழந்தையை ஆந்திர தம்பதியிடமிருந்து கேரளத்துக்கு கொண்டுவரும்படி கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சிலுக்கு குழந்தைகள் நல கமிட்டி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கவுன்சில் குழுவினா் ஆந்திரத்துக்குச் சென்று அக்குழந்தையை கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தனா். பின்னா், அக்குழந்தை ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்னா், அக்குழந்தை மற்றும் அனுபமா-அஜித் ஆகியோரின் மரபணு மாதிரி திங்கள்கிழமை சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி மையத்தில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது. அதன் அடிப்படையில், அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய அனுபமா, ‘மரபணு பரிசோதனை முடிவுகளை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். இருப்பினும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தை தொடருவோம். குழந்தையை எங்களிடம் ஒப்படைப்பதில் மேலும் தாமதம் இருக்காது என நம்புகிறோம்’ என்றாா்.
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நவ. 30-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.