புணேயிலிருந்து அயோத்திக்குச் செல்லும் ராமபாதை யாத்திரை சிறப்பு ரயிலை ரயில்வே இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
இதுதொடா்பாக இந்திய ரயில்வேயின் புணே மண்டலம் வெளியிட்ட அறிக்கையில், ‘ அயோத்தி, நந்திகிராம், வாராணசி, பிரயாக், ஷ்ரிங்கவோ்பூா், சித்ரகூட் போன்ற இடங்கள் வழியாக ராமபாதை யாத்திரை சிறப்பு ரயில் செல்லும். லோனாவாலா, கல்யாண், நாசிக், சாலிஸ்கான் உள்ளிட்ட இடங்களில் இந்த ரயில் நிற்கும். இந்த ரயிலை புணேயிலிருந்து அயோத்திக்கு ரயில்வே இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே காணொலி வழியாகக் கொடியசைத்து அனுப்பிவைத்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராவ்சாஹேப் தான்வே பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ‘உங்கள் நாட்டைப் பாருங்கள்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ராமபாதை யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் பகவான் ராமா் பயணித்த முக்கிய இடங்கள் வழியாகச் செல்லும்’ என்று தெரிவித்தாா்.