கஞ்சா செடி வளர்ப்பைத் தடுக்கும் வகையில் டிரோன் கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் சென்சார் தொழில் நுட்பங்களை ஒடிசா அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் வனப்பகுதியையொட்டிய பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதைப்பொருள்களை உற்பத்தி செய்யும் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
இதனைத் தடுக்க ஒடிசா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டில் 22 ஆயிரத்து 217 ஏக்கர் கஞ்சா செடிகள் அகற்றப்பட்டன. இதற்கு முன்பு 2018-19-ம் ஆண்டில் 9,473 ஏக்கர் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், கஞ்சா செடி போன்ற போதைப்பொருள் தாவரங்களை வளர்ப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் டிரோன் மற்றும் செயற்கைக்கோள் சென்சார் தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தெந்த பகுதிகளில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து அதனை அழிக்கும் நடவடிக்கையில் இறங்க வருவாய்த் துறையினருக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். மேலும், நில உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.