உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்போது தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை நேரில் சென்று ராகுல்காந்தி சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இன்று லக்கிம்பூர் கேரிக்கு செல்ல திட்டமிட்டனர்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு இன்று காலை அனுமதி மறுத்த நிலையில், மாலையில் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து லக்கிம்பூர் செல்லும் ராகுல் காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்திக்கவுள்ளார்.