உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அமைதியாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளி்ன் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான கார் ஏறியதில் 8 பேர் உயிரிழந்தனர். முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த சம்பவம் அடங்கிய விடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான தெளிவான காட்சிகள் அடங்கிய விடியோவை பாஜக எம்பி வருண் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பின்னர் பதிவிட்டுள்ள அவர், "விடியோ தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். வெளிபட்டுள்ள ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்குத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றிக்கிழமை நிகழ்ந்த லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து வருண் காந்தி தொடர் விமரிசனங்களை மேற்கொண்டுவருகிறார். முன்னதாக. செவ்வாய்கிழமை இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், "சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட விடியோ யாராக இருந்தாலும் அவரின் மனசாட்சியை உலுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேச காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதற்கு முன்பு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தார் மோடி
அதேபோல், விவசாயிகள் காரின் மீது கல்வீச்சு நடத்தியதாக அஜய் மிஸ்ரா குறிப்பிட்டிருந்தார். ஆனால், சம்பவம் குறித்து நேற்று வெளியான விடியோவில் அப்படி போன்ற சம்பவம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.