/

மின் பற்றாக்குறையில் தத்தளிக்கவுள்ள தில்லி; முன்கூட்டியே கணித்த அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் மின் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் இதுகுறித்த நிலவரத்தை தனிப்பட்ட அளவில் கவனித்துவருகிறேன் என்றும் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 அக்டோபர் 2021, 11:12 am

DIN

தில்லியில் மின் நெருக்கடி ஏற்படலாம் என்றும் தன்னுடைய அரசு அந்த நிலைமையை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

நகரில் மின்சாரத்தை விநியோகம் செய்ய நிலக்கரி மற்றும் எரிவாயுவை ஏற்பாடு செய்து தரக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தில்லியில் மின்சார நெருக்கடி ஏற்படலாம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 

அதைத் தவிர்க்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். இதற்கிடையில், பிரதமர் இதில் தனிப்பட்ட அளவில் தலையீடக் கோரி நான் ஒரு கடிதம் எழுதினேன்" என பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், தில்லி ஆகஸ்ட் மாதம் முதல் நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்துவருகிறது என கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

"ஆகஸ்ட்/செப்டம்பர் முதல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிலவும் நிலக்கரி பற்றாக்குறை நிலைமை குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன். தில்லிக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய மத்திய உற்பத்தி ஆலைகளில் இருந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு நிலக்கரியை மற்ற ஆலைகளில் இருந்து தாத்ரி - 2 மற்றும் ஜஜ்ஜார் டிபிஎஸ் போன்ற ஆலைகளுக்கு திருப்பி விட வேண்டும். 

நகருக்கு மின்சாரத்தை விநியோகம் செய்யும் பவானா, பிரகதி - I மற்றும் ஜிடிபிஎஸ் ஆகிய ஆலைகளுக்கு எரிவாயுவை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.