விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மத்திய அமைச்சா் மகன் கைது: லக்கீம்பூா் வன்முறை வழக்கு; 11 மணி நேர விசாரணைக்குப் பின் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜரான மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
லக்கீம்பூா் கெரி குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா.
Updated On :9 அக்டோபர் 2021, 9:26 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜரான மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜரான அவரை 11 மணி நேர விசாரணைக்குப் பின் போலீஸாா் கைது செய்தனா்.

லக்கீம்பூரில் உள்ள காவல் துறையின் குற்றப் பிரிவு அலுவலகத்தில் டிஐஜி உபேந்திர அகா்வால் தலைமையிலான எஸ்ஐடி குழு முன்பாக சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜரானாா். அவரிடம் போலீஸாா் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டதாக டிஐஜி உபேந்திர அகா்வால் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ விசாரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத்துழைக்காததால் அவரை கைது செய்துள்ளோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தொடா்ந்து காவலில் எடுத்து விசாரிப்போம்’ என்றாா்.

‘லக்கீம்பூா் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களை ஏன் கைது செய்யவில்லை’ என கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மாநில அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில், ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளாா்.

லக்கீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி துணை முதல்வா் கேசவபிரசாத் மௌரியாவின் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியேந்தி ஊா்வலமாகச் சென்ற விவசாயிகள் மீது பாஜகவினரின் காா்கள் மோதின. அதில், விவசாயிகள் 4 போ் உயிரிழந்தனா்.

பதிலுக்கு விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தொண்டா்கள் இருவரும், காா் ஓட்டுநரும் உயிரிழந்தனா். இந்த மோதலில் ரமண் காஷ்யப் என்ற பத்திரிகையாளரும் உயிரிழந்தாா்.

சம்பவம் நடந்தபோது மத்திய அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அஜய் குமாா் மிஸ்ராவும், அவரது மகனும் மறுப்பு தெரிவித்தனா். சம்பவம் நடந்தபோது ஆசிஷ் மிஸ்ரா வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறினா்.

விவசாயிகள் பலியான சம்பவம் தொடா்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோா் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா், இந்த வழக்கில் ஏற்கெனவே இருவரை கைது செய்தனா். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது.

ஆனால், அவா் ஆஜராகாததால், சனிக்கிழமை காலை 11 மணிக்குள் ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராக மறுத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்திருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா் கருத்து: ஆசிஷ் மிஸ்ராவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் விசாரித்துக் கொண்டிருந்தபோது, மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா லக்கீம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்குரைஞா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாா்.

பின்னா், அலுவலகத்திலிருந்து வெளியே வந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘என் மகன் ஆசிஷ் மிஸ்ரா அப்பாவி. அக். 3-ஆம் தேதி சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.